ஜிஎஸ்டி வரி நச்சுனு நாலு கேள்வி! #GSTBill

ஜிஎஸ்டி வரி நச்சுனு நாலு கேள்வி! #GSTBill
 

1. ஜிஎஸ்டி வரி என்றால் என்ன? இதன் நோக்கம்?

ஜிஎஸ்டி வரி என்பது சேவை மற்றும் சரக்கிற்கான ஒருங்கிணைக்கப்பட்ட வரி. மத்திய அரசு, மாநில அரசு என பல தரப்பட்ட வரிகளில் இருந்து எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து 'ஒரே நாடு ஒரே வரி' என்பது போல் மறைமுகவரி அனைத்தையும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வரிதான் ஜிஎஸ்டி.

ஜிஎஸ்டி வரியின் முக்கிய நோக்கமே வரி சீர்திருத்தம்தான். இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய முயற்சி. இப்பொழுது இருக்கும் மறைமுக வரி சட்டங்கள் அனைத்தும் அனைவரிடமும் வரி வசூல் செய்யாமல் சில பேரிடம் மட்டுமே வரி வசூல் செய்வதாக உள்ளது. இந்த நிலையில் இந்த ஜிஎஸ்டி வரியின் மூலம் அனைவரிடமும் வரி வசூல் நடவடைக்கை மேற்கொள்ளப்படும்.

2. ஜிஎஸ்டி-ல்  யார் எல்லாம் வரி கட்ட வேண்டி வரும்?

உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், ரீடெய்லர்கள் என அனைவரும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

3. ஜிஎஸ்டி வரியால் பொதுமக்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு என்ன பலன்?

பொதுமக்கள்:-

ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு ஒரு சில மாதங்களில் விலைவாசி அதிகரித்து காணப்படும். அதன் பிறகு பொருட்களின் விலையும் குறைய வாய்ப்பிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு வரி குறைவதால் நுகர்வோர்களுக்கு வாங்கும் பொருட்களின் விலையும் குறையும். சேவை சார்ந்த பொருட்களின் விலை மட்டும் சற்று உயரும்.

கார்ப்பரேட் நிறுவனம்:-

கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒரே பரிவர்த்தனையில் பல வரிகள் செலுத்தி வருகின்றனர்; வரி மேல் வரி செலுத்தி வருகின்றனர்.  ஆனால், ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு இது எல்லாம் குறைந்து ஒரே வரியாகிவிடும்.

அரசு:-

மறைமுக வரி செலுத்தாமல் இருக்கும் பலர் வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். நாட்டின் வரி வருவாய் அதிகரிக்கும்.

மறைமுக வரியின் மூலம் வரி செலுத்துபவர்கள், நேர்முறைமுக வரியும் (வருமான வரி) செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் அரசுக்கு வரி வருவாய்  கூடும்.

4. ஜிஎஸ்டி வரியால்  பொருளாதார வளர்ச்சி எப்படி இருக்கும்?

எந்த ஒரு நல்ல திட்டமாக இருந்தாலும் அது சிறப்பாக செயல்படுவது அந்த திட்டத்தை முறையாக நிர்வகிக்கும் முறையில்தான் இருக்கிறது. அதன் அடிப்படையிலே பொருளாதார வளர்ச்சியானது இருக்கும். முதல் ஆறு மாதத்தில் பணவீக்கம் என்பது அதிகமாக இருக்கும். அதன்பிறகு நிலையானதாக இருக்கும்.

ஜிஎஸ்டி மசோதா என்பது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும். பொதுமக்களைப் பொறுத்தவரை பழைய சட்டங்கள் அனைத்தும் மறக்க வேண்டிய வரும். பழைய சட்டம் எல்லாமே செல்லாது. பல புதிய சட்டங்கள் வரும். எனினும் ஜிஸ்டி வரியால் பல பொருட்களின் விலை குறையும் என்பதால் இது நல்லது.